- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நல்ல தலைவர்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். அவரது இந்தப் பேச்சு தனித்துப் போட்டியிடும் அவரது விருப்பத்தை உணர்த்துகிறதா?
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று கூறப்படும் நிலையில், இன்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் தெரிவித்த சில கருத்துகள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
IND vs SA: நிறவெறித் தடை, அவப்பெயர், கேலிப்பேச்சு - தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளைக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?
விஜய் பேசியது என்ன?
சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய விஜய், பொதுவான சில கருத்துகளைப் பேசியதோடு கவனிக்கத்தக்க சில விஷயங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
"தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு பணி வாய்ப்பாக ஏன் வரக்கூடாது? அப்படி வர வேண்டுமென்பதே என் விருப்பம்."
"நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படியுங்கள். ஒரே செய்தியை வெவ்வேறு நாளிதழ்கள் வெவ்வெறு மாதிரி எழுதுவார்கள். எல்லாவற்றையும் பாருங்கள், படியுங்கள். எது உண்மை, எது பொய் என ஆராயுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத் தீமைகள் பற்றியெல்லாம் தெரிய வரும். அதைத் தெரிந்துகொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை நம்பாமல், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதைத் தெரிந்துகொண்டு, நல்ல தலைவர்களைத் தேர்வுசெய்யும் விசாலமான பார்வை வரும்."
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
"சமீப காலத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை, ஆளும் அரசு தவறவிட்டுவிட்டார்கள் என்று பேச வரவில்லை. அதற்கான மேடையும் இதுவல்ல. சில நேரங்களில் நம் வாழ்வை நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பேசியிருக்கிறார் விஜய்.
இதில் நல்ல தலைவர்கள் தேவை என அவர் குறிப்பிட்டது, ஊடகங்கள் மீதான அவரது விமர்சனம், போதைப் பொருளிலிருந்து காப்பது அரசின் கடமை என்பன போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் கவனிப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளாகியிருக்கின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளவிருக்கும் ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ - ஏன்?
ஸ்டார்லைனர் விண்கலனில் கோளாறு - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
விஜயின் பேச்சு குறித்து கருத்து கூறிய மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன், "அவரது பேச்சை வைத்துப் பார்த்தால், விஜய் தி.மு.கவுக்கு எதிரான மனநிலை தனக்கு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதுதவிர, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி, திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்து சொன்னவர், தமிழ்நாட்டில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்ற கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சொல்லவில்லை.’’
’’ஆனால், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைப்பவர், ஆளும் கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் செய்ய முடியும். இருந்தபோதும், மக்கள் பிரச்னைக்கு அவர் எப்படி, எவ்வளவு தீவிரமாகச் செயல்படுவார் என்பதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானமாகும்," என்கிறார்.
நாம் தமிழருடன் கூட்டணியா?
இதற்கிடையில், தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதைக் கோடிட்டு காட்டும் வகையில் பேசியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டால், இதெல்லாம் மிகவும் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள்.
"வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகள்தான் தனித்து நிற்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எங்கள் அனுபவம் தேவைப்படலாம். எங்களுக்கும் துடிப்புமிக்க இளைஞர்களின் கூட்டு தேவைப்படுகிறது.
ஆகவே, இரு பிரிவினரும் எதார்த்தமாகவே நெருக்கமாக இருக்கிறோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பொறுப்பாளரான பாக்கியராசன்.
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளைக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?
அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதிமுகவும் அந்தக் கூட்டணியில் ஆர்வம் காட்டக்கூடும் என்கிறார் குபேந்திரன்.
"விஜய்யின் பிறந்தநாளுக்கு பலத்த வாழ்த்துகளைச் சொல்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. கள்ளக்குறிச்சிக்கு விஜய் சென்றதற்கு வாழ்த்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டும் என்ற தவிப்பில் உள்ள அதிமுகவுக்கு விஜய் நிச்சயம் தேவைப்படுவார்."
ஆனால், "அப்படி ஒரு கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை. அந்தக் கூட்டணியில் சீமான் இருப்பாரா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்து முதல்வர் யார் என்பதுவரை மூன்று தரப்புமே இறங்கிவர வேண்டியிருக்கும்" என்கிறார் குபேந்திரன்.
நாம் தமிழர் வட்டாரங்களில் வேறு ஒரு விஷயத்தையும் சொல்கிறார்கள். அதாவது சமீபத்தில் விஜய்யும் சீமானும் சந்தித்துப் பேசியதாகவும் வேறு சிலரையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம் என விஜய் கூறியதாகவும் தேர்தல் நெருக்கத்தில் அதை முடிவு செய்யலாம் என சீமான் கூறியதாகவும் சொல்கின்றனர்.
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
'அரசமைப்புச் சட்டம் vs எமர்ஜென்சி' விவாதம்: காங்கிரசும் பா.ஜ.க-வும் எதைச் சாதிக்க விரும்புகின்றன?
ஆனால், இதற்கெல்லாம் முற்றிலும் மாறான ஒரு கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
"விஜய்யை பொறுத்தவரை தனித்துக் களம் காணவே விரும்புவார். அவர் முதல் முறையாகக் களமிறங்குவதால் தனது வாக்கு வங்கியின் பலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். சீமானை பொறுத்தவரை அவரது வாக்கு வங்கி பத்து சதவீதத்திற்குக் கீழேதான் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதை உயர்த்த மிகுந்த முயற்சியும் காலமும் தேவை. ஆகவே கூட்டணி அமைக்க விரும்புகிறார்," என்று தெரிவிக்கிறார் அவர்.
மேலும், "வரவிருக்கும் 2026 தேர்தல் களம் தி.மு.கவுக்கு எதிரானது. பா.ஜ.க. இன்னொரு கூட்டணியாக இருக்கும். அந்த இரண்டிலும் சீமான் இடம்பெற முடியாது. எனவே, அதிமுக., விஜய்யுடன் இணைந்து களம் அமைக்க அவர் விரும்பலாம். ஆனால், விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகம். தன்னுடைய இன்றைய பேச்சில் விஜய் அதைத்தான் உணர்த்தியிருக்கிறார். அதாவது, நல்ல தலைவர்கள் தேவை என்கிறார். இப்போதுள்ள தலைவர்களை விட்டுவிட்டு, அத்தகைய நல்ல தலைவராக வர அவர் விரும்புகிறார் என்பதைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது. 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதெல்லாம் தெளிவாகும்," என்கிறார் ஷ்யாம்.
விஜய் தரப்பைப் பொறுத்தவரை வேறு சில கணக்குகளும் இருக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளின் மொத்த சதவீதம் சற்று குறைந்து, நாம் தமிழர், பாஜக ஆகியவை குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கும் அவர்கள், இரு திராவிடக் கட்சிகளும் இழக்கும் வாக்குகளின் பெரும்பகுதியைப் பெற நினைக்கிறார்கள்.
இது தவிர, விஜய் களத்தில் இறங்கினால், பட்டியலின, சிறுபான்மையினர் வாக்குகளும் திராவிடக் கட்சிகளிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறார்கள். இதுதவிர, GOAT படம் வெளியான பிறகு, தீவிர அரசியலை விஜய் கையிலெடுப்பதோடு, மாநாடு ஒன்றையும் நடத்தக்கூடும் என்கிறார்கள்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)